|
Sunday, 26 April 2009 |
சிங்கப்பூர் ஐனநாயகளாளர்கள்
சிங்கப்பூரில் தொழிலாளர்களின் வேலை இழப்பும், அதனால் பெருகிவரும் வேலையில்லாத் தொழிலாளர்களின் பட்டாளமும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கத் தலைவர்களோ இதைப்பற்றி ஒன்றும் தெரியாததுபோல் - ஆயிரக்கணக்கான நம் தொழிலாளர்களின் பாரதூரமான இன்னல்களையும் கண்டும் காணாததுபோல் ஏனோதானோ என்று மெத்தனமாக இருக்கிறார்கள்.
இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று மேன்மைமிகு தலைமை அமைச்சர் லீ சியன் லூங்கே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் நமது பொருளாதாரம் இன்னும் அதிகமாகச் சுருங்கக்கூடுமென்றும் - அதாவது நம் பொருளாதாரம் சுருங்கக்கூடும் என்று இப்போது அவர்கள் கணித்து இருக்கும் 2 முதல் 5 விழுக்காடு வரையிலான வீழ்ச்சி மேலும் சரிவை நோக்கிச் சுருங்கக்கூடும்.
இப்படி அதிகரிக்கும் நிலையற்ற தன்மைக்குத் திரு.லிம் சுவீ செ தன் பங்கிற்குக் கூறியுள்ளார்: '' மேலும் ஓர் இரண்டாவது ஆட்குறைப்புப் பேரலை வரக்கூடும், அதில் எத்தனைத் தொழிலாளர்கள் வேலையை இழப்பார்கள் என எவராலும் கணிக்க முடியாது'' என்று கூறியுள்ள திரு.லிம் யாரெனத் தெரியுமா? தலைமை அமைச்சர் அலுவலகத்தில் ஓர் அமைச்சர் மட்டுமல்ல - சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்கப் பேரவையின் பொதுச் செயலாளருமாவார்.
எத்தனைப் பேர் வேலை இழப்பர் என ''எவராலும் கணிக்க'' முடியாது என்பதை நம்மிடம் சொல்லத்தான் ஓர் ஆண்டுக்கு $2.5 மில்லியன் ஊதியம் பெறுகிறார் போலும். ''எவராலும் கணிக்க'' முடியாது என்பதைக் கூற நமக்கு அமைச்சரோ - தொழிற்சங்கத் தலைவரோ தேவையில்லை. இந்தக் கணிப்பை எவராலும் கூற முடியும்.
ம.செ.க. அரசு தம்பட்டம் அடிப்பது என்னவென்றால், நம்மிடையே இருக்கக்கூடியவர்களில் மிகமிகத் திறமையானவர்களை அமைச்சர்களாகத் தேர்ந்தெடுத்திருகிறோம் என்பதோடு இவர்கள் எதிர்வரும் இருபது - முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப்போவதைத் தொலை நோக்கோடு இப்போதே முன்னுரைப்பவர்களென்று பீற்றிக் கொள்வதுதான் வேடிக்கை.
ஆனால் உலகத்திலேயே அதிகமான ஊதியம் வாங்கிக்கொண்டு அரசியல் பண்ணும் இக்குழுவினரால் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு எவ்வித தீர்வும் காண முடியவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் வளரும்போது நாமும் அமெரிக்கர்களுக்கு நம் பொருட்களை விற்கலாம் என்று கூறிக்கொண்டிருக்கக்கூடிய கையாலாகாத நிலைமைக்குத் தள்ளாப்பட்டிருக்கிறோம்.
இந்நிலைமையின்படி, தமக்குத்தாமே மெச்சிப் புகழ்ந்து கொண்டு, அதிகத் திறமைக்கொண்ட சிங்கப்பூருக்குக் கடவுளால் வழங்கப்பட்ட ''பரிசு'' என்று ஏன் இந்த அமைச்சர்கள் சொல்லித் திரிய வேண்டும்?
யாரிடமேனும் கருத்துக்கள்?
நாட்கள் செல்லச்செல்ல குறிப்பாக நாட்டின் பொருளாதார நடவடிக்கையை, ம.செ.க. வின் நிர்வாகம் தொடர்ந்து அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏதுவாகக் குத்தகை உற்பத்திக்கு ஆட்படுத்தியதினால்தான் இந்தச் சிக்கல் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. கிட்டத்திட்ட நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதியை நோக்கிய உதிரி - உற்பத்தி பொருளாதாரம் ''மாலுமியற்ற தானியங்கி'' நிலைதான்.
ஆனால் இப்பொழுது மேலை நாட்டுப் பொருளாதாரமும் நிலைகுத்திவிட்டது. இந்நிலையில் நம் வலுவிழந்த பொருளாதாரத்திற்கு ம.செ.க வின் மாற்று என்ன?
அரசுக்கும் தெமாசெக் (TEMASEK)குக்கும் தொடர்புள்ள குழுமங்கள் தொடர்ந்து உள்நாட்டில் ஏகபோகமாக இருக்க எழுபது விழுக்காட்டுக்கு மேல் உற்பத்தித்துறையில் அந்நிய பன்னாட்டு நிருவணங்களின் கையில் இருக்கிறது. இவை பெரும்பாலும் குறைந்த தொழில்நுட்ப செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. எவ்விதமான உயர்தர தொழில்நுட்ப ஆராய்ச்சியோ வளர்ச்சியோ இல்லை.
ம.செ.க அரசு சிங்கப்பூரில் எல்லாவித நடவடிக்கையையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க, அதாவது சமுதாய, பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் மக்களுக்கும் நாட்டுக்கும் விரிசலை உண்டாக்கி கூட்டம் கூட்டமாகச் சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளுக்குக் குடியேறும் நிலைக்குத் தள்ளுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் சிங்கப்பூரர்கள் தங்களின் குடியுரிமையைப் புறக்கணிக்கிறார்கள். இவ்வேதனைக்குரிய தகவல் முழுமையான கதையல்ல. ஒவ்வொரு மாதமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வேற்று நாட்டில் நிரந்திரவாசியாக வேண்டுமென்று வாய்ப்பைத் தேடுகிறார்கள். இவர்கள் வெளியேற்றத்தினால் இவர்களின் திறமையும் சிங்கப்பூருக்குப் பயனின்றிப் போய்விடுகின்றது.
நாட்டின் 4.8 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வெளிநாட்டினர். ஆனால் அரசோ, இவ்வெளிநாட்டவர்களின் திடீர் குவிதலால் ஏற்படக்கூடிய சமுதாய, பொருளாதார விளைவுகளுக்குக் குறைவாகவே கவனம் செலுத்துகிறது.
வேறு ஏதேனும் தீர்வுகள் உண்டா? ஏன் பதவியில் இருப்பவர்கள், கூட்டம் கூட்டமாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணம் என்னவென்று பார்க்கக்கூடாது? ஏன் நாம் திறனாய்வையும் தொழிற் திறமைகளையும் ஊக்குவித்து நம் சர்வாதிகார பிடியிலிருந்து விடுவிக்கக்கூடாது?
வழி நடத்த தெரியாத அமைச்சர்கள் ஏன் தம்மைத்தாமே மில்லியனர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்?
ஏன் அமைச்சரவையை மேலும் நிரப்ப வேண்டும்? பொருளாதாரம் நசிந்துகொண்டிருக்கும் வேளையில் ஏன் பதினெட்டிலிருந்து இருபத்தியொன்று அமைச்சர்கள்?
இப்போது நிலவும் பொருளாதார உருகு நிலைக்கு ஒரு தீர்வு - சிங்கப்பூரை விடுவித்து, மக்களை முன்னிலை படுத்துவதின் மூலம், ம.செ.க வின் வளைந்து கொடுக்காத மேலாண்மை ஆட்சி நிறைய ஆற்றல்களைக் கொலை செய்வதைத் தவிர்ப்பது.
அமைப்பைச் சீர்திருத்தம் செய்து மாற்றுக் கண்ணோட்டத்தினையும் மாற்றுக் கருத்துக்களையும் மேலோங்கச் செய்ய வழிவிடுவது இன்றியமையாத தேவை. ஒரு கட்சி ஆட்சி இந்தப் புதிய யுகத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு வழியல்ல.
குறிப்பு: இக்கட்டுரையில் ம.செ.க என்று குறிப்பது, நம் சிங்க்கப்பூரை 1959 முதல் அதிகாரம் செலுத்திவரும் மக்கள் செயல் கட்சி ஆகும்.
|
|
Danny the Democracy Bear
|
|
|
 Now available online here! |
|
Awesome Words
“The greatest test of courage on earth is to bear defeat without losing heart.” Robert Green Ingersoll
News feeds
|